Saturday, September 29, 2007

பைலட் ஆக விருப்பமா ? அப்படியானால் வெளிநாடு செல்லுங்கள். அங்குதான் பயிற்சி கட்டணம் குறைவு

புதுடில்லி : பைலட் ஆகி உலகம் முழுவதும் விமானத்தில் சுற்ற யாருக்கு தான் ஆசை இருக்காது. அதுவும் இப்போது பைலட்டுக்கு இருக்கும் டிமாண்ட்டில் எல்லோருமே பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பது நியாயமானதே. ஆனால் இந்தியாவில் பைலட்டுக்கான படிப்புக்கு ஆகும் செலவை விட, அமெரிக்காவில் படித்தால் குறைவாகத்தான் செலவாகிறது. இந்தியாவில் படிப்பதை விட அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் பைலட் படிப்பிற்கு குறைவான கட்டணம் தான் ஆகிறது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்திராகாந்தி ராஷ்டிரிய உர்ரான் அகாடமியில், பைலட்டுக்கான படிப்பிற்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே படிப்பிற்கு அமெரிக்காவில் ரூ.16 லட்சம் தான் கட்டணம். மேலும் அமெரிக்காவில் ஆறு மாதத்தில் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுவிடும். ஆனால் இந்தியாவிலோ பயிற்சி காலம் இரண்டரை ஆண்டுகள். மேலும் பைலட்டாக பயிற்சி எடுத்த ஒருவர் 200 மணி நேரம் விமானத்தை ஓட்டி இருந்தால் மட்டுமே லைசன்ஸ் கொடுக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளிலும் கட்டணம் குறைவுதான். மலேஷியாவில் ரூ.10 முதல் ரூ.12 லட்சம்தான் கட்டணம். பயிற்சி காலமும் ஒரு வருடம்தான். பிலிப்பைன்சில் ரூ.9 முதல் ரூ.10 லட்சம் வரை தான் கட்டணம். உலகிலேயே லைலட் படிப்பிற்கு குறைந்த கட்டணம் வசூலிப்பது பிலிப்பைன்சில்தான். இதனால் இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் பைலட் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். கடந்த ஒரு வருட காலத்தில் இந்தியாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்த பைலட்டுகளில் 60 சதவீதத்தினர் வெளிநாடுகளில் பயிற்சி எடுத்தவர்கள் தான். ஆனால் இதே நிலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இப்போது இந்தியாவில் விமான சர்வீஸ் துறை வேகமாக வளர்ந்து வருவதால், இன்னும் ஐந்து வருடங்களுக்கு, வருடத்திற்கு ஆயிரம் பைலட்டுகள் வரை தேவைப்படுகிறார்கள். தற்போது இந்தியாவில் 42 பைலட் டிரெய்னிங் இன்ஸ்டியூட்டுகள் இருக்கின்றன. அவைகளில் 25 தான் இயங்குகின்றன.( மாநிலங்கள் நடத்துவது 14, தனியார் நடத்துவது 11 ) இவைகளின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 பைலட்டுகள் தான் வெளியே வருகிறார்கள். வருடத்திற்கு 600 முதல் 700 பைலட்டுகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது. தனியார் நடத்தும் பயிற்சி நிலையங்கள் ரூ.16 லட்சம் வசூலிக்கின்றன. இவைகள் பலதரப்பட்ட விமான இஞ்சின்களை இயக்க பயிற்சி கொடுப்பதில்லை. பலதரப்பட்ட இஞ்சின்களை இயக்க தெரிந்திருந்தால்தான் சர்வதேச அளவில் இருக்கும் விமான கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்ல முடியும். அரசு நடத்தும் பயிற்சி பள்ளியில் ரூ.10 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கும் வசதி குறைவு காரணமாக பயிற்சியை முடிக்க மூன்று வருடங்கள் ஆகி விடுகிறது. மேலும் அவர்களுக்கு குறைந்த அளவே வானில் பறந்த அனுபவம் இருக்கிறது. அவர்கள் 10 மாத காலத்தில் மொத்தமே 20 மணி நேர பறக்கும் அனுபவத்தை பெறுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் படித்த ஒருவர் ஐந்து மாதத்தில் 200 மணி நேர பறக்கும் அனுபவத்தை பெறுகிறார். இந்தியாவில் எரிபொருளின் விலை அதிகம்; விமானங்களை பராமரிக்க செலவு அதிகம் மற்றும் விமான பயிற்சி கொடுப்பவருக்கு சம்பளம் அதிகம் போன்றவைதான் இங்கு அதிக கட்டணம் வசூலிக்க காரணமாக அமைகிறது. விமான பயிற்சியாளருக்கு மாத சம்பளம் ரூ.3 லட்சம் கொடுக்கப்படுகிறது. அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர் ஏதாவது ஒரு விமான கம்பெனியில் அதைவிட கூடுதல் சம்பளத்திற்கு விமானியாக சேர்ந்து விடுவார். மேலும் ஏர்பஸ் ஏ 320, போயிங் 737 போன்ற நவீன ரக விமானங்களை ஓட்ட இந்தியாவில் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் பயிற்சி கொடுப்பதில்லை. இந்த வகை விமானங்கø வாங்கி இருக்கும் விமான கம்பெனியே அவர்களிடம் இருக்கும் விமானிகளுக்கு இந்த வகை விமானங்களை ஓட்ட பயிற்சி கொடுத்துக்கொள்கிறது.

No comments: